சென்னை: சத்துணவு திட்டத்துக்காக, முட்டை டெண்டர் நடவடிக்கைகளை வரும் 20-ம் தேதி வரை நிறுத்திவைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிகளில் 2017-2018ஆம் ஆண்டுக்கான சத்துணவு திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 48 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரி தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
அதில் மாநிலத்தில் உள்ள சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வெளி மாநில கோழி பண்ணைகள் பங்கு பெறுவதைத் தடை செய்தும், தமிழகத்தை ஆறு மண்டலங்களாகப் பிரித்து மண்டல வாரியாக ஒப்பந்தப் புள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இதனால், தனியார் கோழி பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அரசு அறிவித்த இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்புக்கு தடை கோரியும், இதில் வெளி மாநில கோழிப் பண்ணைகளை அனுமதிக்கக் கோரியும் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. கரூரைச் சேர்ந்த வாசுகி கோழி பண்ணை உள்ளிட்ட 4 பண்ணைகள் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். மகாதேவன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கொள்முதல் விவகாரத்தில் அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள உரிமை உள்ளதாகவும், குறிப்பிட்ட நபருக்கு சாதகமாக செயல்பட அரசாணை பிறப்பிக்கப் படவில்லை எனவும், இடைத்தரகர்களை தவிர்க்கவும், ஆரோக்கியமான போட்டியை மனதில் கொண்டுமே இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
இதை அடுத்து செப்டம்பர் 20ஆம் தேதி வரை அவகாசம் வழங்குவதாகவும், அதுவரை டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். செப்.20ஆம் தேதிக்கு அடுத்த கட்ட விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி மகாதேவன்!