கோவை: தேர்தலில் போட்டியிடுவது குறித்து பயிலரங்கில் ஆலோசிக்கப் பட்டது; தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது என்று கூறினார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்.
கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் பயிலரங்கம் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு கமலஹாசன் பேட்டி அளித்தார் .
இந்தப் பயிலரங்கில் பல துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் முறை குறித்து பயிற்சி அளித்தனர் … அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்பின் பிரச்சார ஆலோகர் அவினாஷ் கலந்து கொண்டு பயிற்சி அளித்துள்ளார் என்று தெரிவித்த கமல்ஹாசன், இதுபோன்ற பயிற்சி முகாம்கள் தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதில் தேர்தலை எதிர் கொள்ளும் முறை உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப் பட்டது என தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலை மக்கள் நலன் கருத்தில் கொள்ளப் படவில்லை என்பது தங்களின் நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.
பா.ஜ.கவினர் கருத்திற்கு எதிர் கருத்து சொல்லக் கூடாது என நினைக்கின்றனர். அது ஜனநாயக நாட்டில் ஒத்துவராத ஒரு விஷயம் எனவும் அவர் தெரிவித்தார். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தலில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறிய கமல்ஹாசன், தேர்தலை உன்னிப்பாக கவனிப்போம், விமர்சிப்போம், மக்களுக்கு நல்லதை சொல்வோம் என தெரிவித்தார்.
இதைவிட பெரிய தேர்தல்களம் வருவதால் அதற்கு தயாராகி வருகின்றோம் எனவும், உள்ளாட்சித் தேர்தலில் தலையிட வேண்டாம் என நினைக்கின்றோம் எனவும் கமலஹாசன் தெரிவித்தார்.
7 பேர் விடுதலை தொடர்பான சட்ட விவகாரம் இவ்வளவு நாள் தாமதப்பட்ட பின்னர் இப்போது அவசரப்படக் கூடாது; எது நியாயமான விசயமோ, நேர்மையான விஷயமோ அது கட்டாயம் நடக்க வேண்டும் எனக் கூறினார் கமல்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருவதாகத் தெரிவித்த அவர், யாராக இருந்தாலும் நீதிமன்றத்தையும், காவல்துறையும் விமர்சிக்கக் கூடாது எனக் கூறினார். அதிமுக.,வினர் சப்பானி என படத்தின் கேரக்டரை சொல்லி பேசும் போது, அதற்கு பதிலுக்கு நாம் ஏதாவது சொன்னால் வருத்தப்படுவார்கள் என்றார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து இந்தப் பயிலரங்கில் ஆலோசித்து வருவதாகவும், தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என நிர்வாகிகள் சொல்கின்றனர் எனக் கூறிய அவர், மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு விட்டது என்றார்.
மாற்றம் மாற்றம் என பேசிக் கொண்டு இருக்காமல் மாற்றமாகவே செயல்பட்டு வருவதாக தெரிவித்த கமல், தலைமை செயலகத்தில் இருந்த ஊழல் சிறை வரை பரவி இருப்பதாகக் கூறினார். தாம் இதுவரை சினிமா பற்றி எதுவும் பேசவில்லை என்பதால், தாம் ஒரு முழுமையான அரசியல்வாதியாகவே இந்தக் கருத்துகளைப் பேசியுள்ளதாகவும் கூறினார்.