சென்னை: நடிகர் அஜீத் குமாரின் குழுவான தக் ஷா மூலம், ஆளில்லா ஏர் டாக்சி தயாரிக்கும் திட்டத்தில் 10 மாதங்களாக பணியாற்றிய நடிகர் அஜித்தின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலை எம்ஐடி வளாகத்தில் உள்ள ‘தக்ஷா’ மாணவர் குழுவுடன் ஆளில்லா விமானத்திற்கான பணியில் இணைந்து பணியாற்றினார் அஜித் குமார். கடந்த 10 மாதங்களாக தக்ஷா குழுவின் ஆலோசகராகவும், ஆளில்லா விமானத்தை ரிமோட் மூலம் இயக்கும் விமானியாகவும் அஜித்குமார் பணியாற்றினார். இந்த ஆளில்லா விமானம் அவசர காலங்களில் நோயாளிய சுமந்து செல்லும் வகையில் ஆம்புலன்ஸ் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
அண்மையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த ஆளில்லா ஏர் டாக்சி காட்சிப் படுத்தப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது .இந்நிலையில் ஆளில்லா ஏர் டாக்சி தயாரிக்கும் திட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் பங்கேற்று கடந்த 10 மாதங்களாக பணியாற்றிய நடிகர் அஜித்தின் பங்களிப்பை பாராட்டியும், அவருக்கு நன்றி தெரிவித்தும் அண்ணா பல்கலைக்கழகம் அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் வரும் காலங்களில் விருப்பம் இருந்தால் கௌரவ பதவியில் தாங்கள் ஆலோசகராகவும் பணியாற்ற வேண்டும் என்றும் அஜித்திடம் விருப்பம் தெரிவித்துள்ளது.