சென்னை -கொல்லம் இடையே செங்கோட்டை, தென்காசி வழியாக புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் தனது இயக்கத்தை இன்று தொடங்கியது. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். அதே நேரம், சென்னை எழும்பூரில் இருந்து இந்த ரயில் புறப்பட்டது.
இதற்கான தொடக்க விழா சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை இன்று மாலை நடைபெற்றது.
இந்த ரயில் (வண்டி எண் 16101) தினமும் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படுகிறது. தென்காசிக்கு மறுநாள் காலை 4.13 மணிக்கும், செங்கோட்டைக்கு காலை 5.10 மணிக்கும் வந்து, கொல்லத்தை காலை 8.45 மணிக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து இந்த ரயில் (வண்டி எண் 16102) காலை 11.45 மணிக்கு புறப்படுகிறது. செங்கோட்டைக்கு மாலை 3.10 மணிக்கும், தென்காசிக்கு 3.28 மணிக்கும் வந்து செல்கிறது. இந்த ரயில் சென்னை எழும்பூரை மறுநாள் அதிகாலை 3.30 மணிக்குச் சென்றடைகிறது.
இந்த ரயிலில் மூன்றடுக்கு ஏ.சி. வசதி பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 8, 2 பொது பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ளது.
கொல்லம், செங்கோட்டை, ராஜபாளையம் மக்களின் வெகுநாள் கோரிக்கையான இந்த ரயிலை இப்போது மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறார் பியூஷ் கோயல்.