ஏதோ தங்களது சொந்த சாலை போன்ற நினைப்பில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் காரை நிறுத்தியதைக் கண்டித்த காவலரை, பிக்பாஸ் புகழ் நடிகை ஜூலி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் சென்னை வேப்பேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை வேப்பேரி டவுட்டன் ரித்தர்ட்டன் சாலையில் இரு தினங்களுக்கு முன் இரவு 9.30 மணி அளவில் கார் ஒன்று சாலையின் குறுக்கே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. அந்நேரம், அப்பகுதி காவல் நிலைய தலைமைக் காவலர் பூபதி, இரு காவலர்களுடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அதே நேரம் ரித்தர்ட்டன் சாலையில் நீண்ட நேரமாக வாகன நெரிசலுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்ட தலைமைக் காவலர் பூபதி தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, போக்குவரத்தை சரிசெய்ய சென்றுள்ளார். அப்போது சாலையில் முறையற்ற வகையில் நிறுத்தப் பட்டிருந்த காரில் நடிகை ஜூலி அவரது ஆண் நண்பர்கள் பிரசாத் உட்பட 2 பேருடன் இருந்துள்ளார்.
இதைக் கண்ட தலைமைக் காவலர் பூபதி, காரை ஏன் நடுரோட்டில் நிறுத்தியிருக்கீங்க என்று கேட்டுள்ளார். அதற்கு காரில் இருந்த பிரசாத், உன் வேலைய பாத்துட்டு போய்யா என்று மரியாதைக் குறைவாகக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தலைமை காவலரை காரில் இருந்த பிரசாத் தாக்கியுள்ளார். பதிலுக்கு தலைமை காவலரும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரசாத் தனது சக நண்பர்களை போன் செய்து வரவழைத்து தலைமைக் காவலர் பூபதியை சாலையிலேயே கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில், இதில் தலைமை காவலர் பூபதிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அங்கிருந்து சென்றுள்ளனர் ஜூலியுடன் வந்தவர்கள்.
இந்நிலையில், காயமடைந்த காவலர் பூபதி வேப்பேரி காவல் நிலையத்தில் தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனது மருத்துவச் செலவுக்கு ரூ.2 லட்சம் பெற்றுத் தர வலியுறுத்தியும் வாய்மொழி புகார் அளித்துள்ளார்.
இதை அறிந்து, நடிகை ஜூலி தரப்பினரும் தலைமை காவலர் பூபதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதை அடுத்து இரண்டு புகார்களின் அடிப்படையில் போலீசார் இரு தரப்பிடமும் விசாரணை மேற்கொண்டனர்.