சென்னையில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதை பாதியில் நிறுத்தி ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தனது 2ஆவது நாள் தேர்தல் பிரசாரத்தை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகில் இருந்து தொடங்கினார். பின்னர் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் அதிமுக., மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார்.
முதல்வர் எடப்பாடி அயனாவரத்தில் மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து தனது பிரசார வாகனத்தில் நின்றபடியே பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதி சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்தது. ஆனால் எடப்பாடியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, அங்கே கூட்டம் திரண்டிருந்தது. இதனால், அந்த சாலை வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை.
இதை கவனித்த எடப்பாடி பழனிசாமி தனது பேச்சை பாதியிலேயே நிறுத்தினார். தன் பிரசார வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தச் சொன்ன அவர், பொதுமக்களும் ஒதுங்கி வழிவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
காவலர்கள் போக்குவரத்தை ஒருங்கிணைக்க, ஆம்புலன்ஸ் அதன் பின்னர் விரைந்தது. இதைப் பார்த்த மக்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதிமுக.,வினர் முதல்வரின் செயலைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் கொண்டாடி மகிழ்கின்றனர்.
Honourable CM Thiru. Edappadi K. Palaniswamy was campaigning for PMK Candidate SAM Paul in Ayanavaram while an Ambulance was Heading towards his speech point Honourable CM Stopped his speech and gave way to the Ambulance and made sure the Ambulance crossed safely. pic.twitter.com/CY4iq0vpAK
— AIADMK (@AIADMKOfficial) March 27, 2019