சேலம் அருகே இளம் பெண்ணுக்கு மது கொடுத்து மயக்க நிலையில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞர்களின் செல்போன்களில் ஆபாச வீடியோக்கள் பல இருந்தது கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து இதே போல் பெண்கள் வேறு யாரேனும் பாதிக்கப் பட்டுள்ளார்களா என்று விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூரைச் சேர்ந்த 27 வயதான இளம்பெண், கடந்த மாதம் சேலம் மருத்துவமனைக்கு தனது தாத்தாவைக் காண்பதற்காக வந்தார். தாத்தா உடல் நலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்ததால், அவருக்கு உதவியாக உடன் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
அந்நிலையில், மருத்துவமனைக்கு வந்திருந்த சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த நயிம் மாலிக் என்பவருடன் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞரிடம் தனது செல்போன் எண்ணைக் கொடுத்துள்ளார் அந்தப் பெண். தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வதாக நயிம் மாலிக் தெரிவித்துள்ளார். இதை நம்பிய அந்தப் பெண், கடந்த வாரம் சேலம் வந்துள்ளார்.
சேலத்துக்கு வந்த அவரை, ஏற்காடு, குரும்பப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் நயிம் மாலிக் கூட்டிச் சென்றுள்ளார். அன்று மாலை, அந்தப் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்துள்ள நயிம் மாலிக், அந்தப் பெண்ணை அரிசிப்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
லாட்ஜில் நயிம் மாலிக்,அவரது நண்பர்கள் இருவர் என மூவரும் சேர்ந்து, அந்தப் பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இதனை செல்போனில் வீடியோ படம் பிடித்து வைத்து, இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அந்தப் பெண்ணின் ஏடிஎம் கார்டில் இருந்தே ரூ.17 ஆயிரத்தை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் தாம் ஏமாற்றப் பட்டதை அறிந்து அழுத அந்தப் பெண், இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த டவுன் மகளிர் போலீசார், நயிம் மாலிக் (24), அவரது நண்பர்கள் நால்ரோடு காமராஜ் காலனியைச் சேர்ந்த நபீஸ் (29), பெரமனூரைச் சேர்ந்த ரஞ்சித் (25) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.
அப்போது, அந்த இளைஞர்களின் செல்போன்களைப் பறிமுதல் செய்து போலீஸார் தீவிர ஆய்வு நடத்தினர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தப் பெண்ணைப் போல் பல பெண்களின் ஆபாச வீடியொக்கள் புகைப்படங்கள் அந்த செல்போன்களில் இருந்துள்ளது. மேலும், பலாத்காரம் செய்வது, பெண்களிடம் உல்லாசம் அனுபவிப்பது என ஏராளமான ஆபாச வீடியோக்கள் அதில் இருந்துள்ளன.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், இந்த மூவரும் சேர்ந்து மேலும் பல பெண்களை பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக எடுத்துள்ளனரா? அல்லது வேறு நபர்களிடம் இருந்து பகிரப் பட்ட வீடியோக்களா என்று விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் லாட்ஜ் ஊழியர்கள் மற்றும் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரித்து வருகின்றனர்.