புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்துக்குள் லைசென்ஸ் வழங்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது அப்படியே நடந்தால், தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று பொது மக்கள் கூறுகின்றனர்.
விண்ணப்பதாரரை புகைப்படம் எடுத்ததும் ஒரு மணி நேரத்திற்குள் அவருக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் சமயமூர்த்தி ஆர்டிஓ களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் ஆர்டிஓ.,க்கள் அதை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை. இதை அடுத்து, தனது உத்தரவை முழுமையாக கடைபிடிக்கவும், கண்டறிந்து சரிசெய்யவும், இந்த உத்தரவை அறிவிப்பாக அச்சிட்டு, அதனை அனைத்து ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் வைக்க உத்தரவிட்டுள்ளார்!
இதையடுத்து பெரும்பாலான ஆர்டிஓ அலுவலகங்களில் தற்போது இது குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வாகன உரிமம் என்ற ஆர்சி புக் மாற்றம் செய்தல் தகுதிச்சான்று புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இணையதளத்தில் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது; விண்ணப்பதாரர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் போக்குவரத்து அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளதால் பிற அலுவலகங்களில் இருந்து தடையில்லா சான்று வாங்க வேண்டிய அவசியமில்லை!ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும்போது மொபைல்போன் எண் ஆதார் எண் இ-மெயில் முகவரி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது!
அதேபோல் அறிவிப்புப் பலகையில் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி இந்த அலுவலகத்தில் அனைத்து ஓட்டுனர் உரிமம் தொடர்பான பணிகளுக்கு விண்ணப்பதாரர் போட்டோ எடுத்த ஒரு மணி நேரத்தில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது… இப்படிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் என்று, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர் பெயருடன் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது!