தமிழக–கேரள மாநில எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அடுத்து அச்சன்கோவில் கல்லாறு எனும் வனப்பகுதி உள்ளது.
இந்த வனப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான தமிழக, கேரள கூலித் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் இந்த கல்லாறு பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தண்ணீரை தேக்கி வைப்பதற்காக, ஆங்காங்கே 10 அடியில் பள்ளங்கள் தோண்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அந்த வழியாக யானைக்கூட்டம் சென்றது. அப்போது 6 மாத குட்டி யானை ஒன்று எதிர்பாராதவிதமாக ரப்பர் தோட்டத்தில் உள்ள சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தது.
தற்போது பெய்து வரும் தொடா் மழையால் அந்த பள்ளத்தில் சேறும் சகதியுமாக இருந்ததால், குட்டி யானை வெளியேற முடியாமல் தவித்து வந்துள்ளது.
மேலும் குட்டியானையை காப்பற்ற மற்ற யானைகள் மீட்க முயன்றும் முடியவில்லை.
இதனால் அந்த யானைகள் பிளிறியவாறு இருந்தன. இது குறித்த தகவல் அறிந்த உடனே அங்கு சென்ற கேரள வனத்துறையினர் பட்டாசு வெடித்து, யானைக்கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அதனைதொடா்ந்து அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, பள்ளத்தில் குட்டி யானை சிக்கி தவிப்பதை அறிந்தனர்.
தொடர்ந்து வனத்துறையினர் அந்த பள்ளத்தின் அருகில் சாய்வாக மற்றொரு பள்ளத்தை தோண்டினர்.
தொடர்ந்து குட்டி யானை சாய்வான பள்ளம் வழியாக வெளியே வந்தது.
உடனே அந்த குட்டி யானை சிறிது தூரம் ஓடிச் சென்று, வனப்பகுதியில் இருந்த யானைக்கூட்டத்துடன் சேர்ந்தது. தாய் யானை அந்த குட்டி யானையை அழைத்து சென்றது.
இது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.