திருப்பூரில் இருந்து கோவை நோக்கிச் வந்து கொண்டிருந்த ஒரு கார்! பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் வழியாக அதிவேகத்தில் அந்த கார் வந்த போது, எதிரே மஞ்சள் வண்ணத்தில் பள்ளி வாகனம் வருவதைக் கண்டார் கார் டிரைவர். மேலும், வேகமாக வரும் சாலையில் குறுக்கே அந்தப் பள்ளி வாகனம் நின்று திரும்புவதைக் கண்டதும், அவர் திடீரென அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் காரை நிறுத்த முயற்சி செய்துள்ளார் டிரைவர். ஆனால் கடும் வேகத்தில் வந்ததால், பிரேக் பிடிக்காமல் வண்டி கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்தது. எனவே, பள்ளி வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக வலது பக்கம் சடாரென காரை திருப்பியுள்ளார். அப்போது சாலையைக் கடந்து பள்ளி வாகனத்தின் பின்னேயே நின்று கொண்டிருந்த பைக் ஒன்றின் மீது கார் மோதிச் சென்றது.
தொடர்ந்து, சாலையோரம் நின்றிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் மற்றும் காரின் மீது மோதி சாலை ஓரம் இருந்த பேக்கரி ஒன்றுக்குள் புகுந்தது.
இதை அடுத்து காரில் இருந்து இறங்கிய ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். கார் கட்டுப்பாட்டை இழந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே அந்த கார் ஓட்டுநரின் பெயர் சூர்யபிரகாஷ் என்பதும், குங்குமம்பாளையம் பிரிவில் உள்ள கார் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்துள்ளது.
அவரை சிறைபிடித்த பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் அந்தப் பகுதிக்கு வருவதற்கு முன்னரே, கார் டிரைவர் தப்பிச் சென்றுவிட்டார். இதை அடுத்து, போலீசார் அந்த கார் டிரைவரை தேடி வருகின்றனர்.