திருச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். ஒருதலை காதலால், இளைஞர் ஒருவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.
திருச்சி தென்னூர் அண்ணாநகர் புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன்.
அய்யப்பனின் மகள் மலர்விழி மீரா (வயது 20). இவர் திருச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து பஸ்சில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அங்குள்ள தண்ணீர்தொட்டி அருகே வந்த ஒரு இளைஞர் மலர்விழி மீராவிடம் மறித்து தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மலர்விழி மீராவை சரமாரியாக குத்தினார்.
இதில் அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து கீழே சாய்ந்தார். இதனை கண்டு அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்து ஓடி சென்று மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே கத்தியால் குத்திய அந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர்.
இதில் அந்த வாலிபரும் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்த தில்லை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அரசு மருத்துவமனையிலும் அந்த வாலிபரை விடாமல் பொதுமக்கள் துரத்தி சென்று தாக்கினர்.
இதில் அவர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கத்தியால் குத்திய வாலிபர், அதே பகுதியை சேர்ந்த முரளி(34) கொலையான மலர்விழி மீராவுக்கு துாரத்து உறவினர் ஆகும்.
முரளிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
மேலும் முரளி மலர்விழி மீராவை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவரது காதலை ஏற்காததால் ஆத்திரம் அடைந்து அவரை கத்தியால் குத்தி வெறிச்செயலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து தில்லை நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா மற்றும், உதவி கமிஷனர்கள் ராமச்சந்திரன் (ஸ்ரீரங்கம்), மணிகண்டன் (கண்டோன்மெண்ட்) மற்றும் போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொலையான மாணவியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருச்சியில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.