திரைப்பட இயக்குனர் ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ரஞ்சித் உரை முழுவதையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி பாரதிதாசன் உத்தரவு பிறப்பித்தார்.
பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா என்று திரைப்பட இயக்குனர் ரஞ்சித் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது
தஞ்சாவூர் திருப்பனந்தாள் அருகே ஒரு கூட்டத்தில் சினிமா இயக்குனர் ரஞ்சித் பேசுகையில், “மன்னர் ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்கிறார்கள்; ஆனால் அவர் ஆண்ட காலம் தான் இருண்ட காலம். எங்கள் நிலம் பறிக்கப்பட்டது அவரது ஆட்சியில்தான்! ஜாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை தொடங்கப்பட்டது அந்த ஆட்சியில் தான்!” என்று கூறினார்!
இந்நிலையில் பா.ரஞ்சித் மீது புகார்கள் பல வந்ததைத் தொடர்ந்து, திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்! அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரஞ்சித் மனுத்தாக்கல் செய்தார்!
நீதிபதி வி பாரதிதாசன் இந்த மனுவை விசாரித்து வந்தார். அப்போது, சில புத்தகங்கள் மற்றும் ஆவணங்களில் இடம்பெற்றுள்ள கருத்துகளைத்தான் மனுதாரர் பேசியுள்ளார் என்றும், அரசியலமைப்பு சட்டப்படி பேச்சு சுதந்திரம் உள்ளது; அதற்கு உட்பட்டு மனுதாரர் பேசியுள்ளார்! எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்றும் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்!
ஆனால் அதற்கு பதிலளித்த நீதிபதி, பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக வரம்பில்லாமல் பேசுவதா? பேச்சு சுதந்திரத்திற்கும் ஒரு எல்லை இல்லையா? ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் நிலம் ராஜராஜ சோழன் ஆட்சியில் கையகப்படுத்தப்பட்டது என்று கூறியதற்கான ஆதாரம் எங்கே? மனுதாரர் எத்தகைய நோக்கத்தில் பேசினார்? வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை மனுதாரர் மற்றும் அரசு தரப்பில் ஜூலை 8-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்! அன்று இறுதி விசாரணை நடைபெறும் என்று கூறினார் நீதிபதி.
இதற்கிடையில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் நேற்று வந்தது! அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி கால அவகாசம் தேவை என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதிபதி இன்று அந்த வழக்கை விசாரிப்பதாக ஒத்திவைத்துள்ளார்!