தென்காசி காவல்துறைக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் இடையிலான ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் தலைமை தாங்கி ஆட்டோ ஓட்டுனர்களுடன் கலந்துரையாடினார். இதில், விபத்தில்லா தென்காசியை உருவாக்குவது குறித்தும், ஆட்டோவில் ஆட்கள் அதிகமாக ஏற்றாமல் இருப்பது, மோட்டார் வாகன சட்டத்தை மதிப்பது, முதலுதவி செய்வது ஆகியன குறித்தும் பேசப் பட்டது.
மேலும், பெருகிவரும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது, பள்ளிக் குழந்தைகளை அதிகமாக ஏற்றாமல் இருப்பது இவை குறித்தும் கலந்துரையாடலில் அலசப் பட்டது.
நிகழ்ச்சியில் நேஷனல் பப்ளிக் பள்ளி தாளாளர் அப்துல், வழக்கறிஞர் அயூப், தென்காசி சாரல் ரத்ததானக் கழகம் நிறுவனர் அன்சாரி, NFS TRUST கோபி, அருண்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
ஓட்டுனர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க வழிமுறைகள் குறித்து மனவளக்கலை நிபுணர் உவைஸ் உரையாற்றினார். நிகழ்ச்சியில், சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தென்காசி காவல்துறை மற்றும் ‘பசியில்லா தென்காசி’ சார்பில் நன்றி தெரிவிக்கப் பட்டது.