வேலூரில் மாவட்ட பத்திர பதிவுத்துறை மற்றும் பதிவாளர் அலுவலகம் வேலப்பாடியில் செயல்பட்டு வருகிறது.
நேற்று மாலை இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது இணைப்பதிவாளர் சிவலிங்கம் என்பவரின் அறையில் இருந்த கணக்கில் வராத 3 லட்சத்து 36ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பத்திரப்பதிவு அலுவலகம் முழுவதும் அனைத்து அறைகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களை பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்பதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரகுநாதன் தலைமையில் 8 க்கும் மேற்பட்ட காவலர்கள் நேற்று மாலை சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலங்கத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், பத்திர எழுத்தர்களின் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 42 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.