சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சாலையில் விபத்தில் உயிரிழந்த சோகம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பி.டெக். படித்து கனடா நாட்டுக்கு வேலைக்குச் செல்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்த இளம்பெண் சுபஸ்ரீ மரணம் குறித்த செய்திகள் பொதுமக்களின் மனங்களில் ரணங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
பேனர் கலாசாரத்தைக் கொண்டு வந்தவர்களே திமுக.,வினர் தான் என்றாலும், இப்போது திமுக., தலைவர் மு.க.ஸ்டாலி இந்தச் சம்பவத்துக்கு டிவிட்டர் பதிவில் பொங்கித் தீர்த்தார். மேலும், தனது கட்சியினர் எவரும் இனி பேனர் கட்டக்கூடாது, ஒன்றிரண்டு வைத்தால் தவறில்லை என்று அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் பேனர்களே கூடாது என்று தனது கோபத்தைக் கொட்டியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.
அவர் இது குறித்து தனது டிவிட்டர் பதிவுகளில் வெளியிட்ட கருத்துகளில்…
பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் ஆகும். பதாகைகள் தவிர்ப்போம்… நாகரிகம் காப்போம். பதாகைகள் அமைத்தவர்களுக்கு அபராதம் விதித்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே இப்படி கூறும் உரிமை உண்டு!
சென்னையில் நடைபாதைகளை பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை. சென்னை நடைபாதைகள் அனைத்தும் இருசக்கர ஊர்திகள் சீறி செல்வதற்கான பாதைகளாக மாறி விட்டன. இந்த காட்சிகளை நேரில் கண்ட நானே இதற்கு சாட்சி. நடைபாதைகளில் செல்பவர்கள் இனி மாற்றுப்பாதையில் (?!?!?) செல்லவும்!
பாமக நிகழ்ச்சிகளில் பதாகைகள்,கட் அவுட்களுக்கு இடம் கிடையாது.தூத்துக்குடியில் பாமக நிகழ்ச்சிக்காக என்னை வரவேற்று வைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பதாகைகளை அகற்றிய பிறகு தான் விழாவில் பங்கேற்றேன்.புதுவையில் வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றியதுடன், வைத்தவர்களுக்கு அபராதமும் விதித்தேன்.
- என்று கூறியுள்ளார்.