தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை தர பரிந்துரைந்துள்ளது மருத்துவர்கள் நிபுணர் குழு.
முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவர் நிபுணர் குழுவின் பிரதிநிதியான ஐசிஎம்ஆர் விஞ்ஞானியும், தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவனத்தின் துணை இயக்குநருமான பிரதீப் கவுர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒட்டு மொத்த இந்தியாவில் 70 சதவீத பாதிப்பு 30 மாவட்டங்களில் மட்டுமே இருக்கிறது. பாதிப்பு அதிகமாக அதிகமாக கொரோனா வார்டு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது ஒரு புதிய நோய்த்தொற்று. அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி வருகிறோம். கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாவதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.
எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் முக கவசம் அணிய வேண்டும். இருமும் போது கைகளை மூடிக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். தொற்று பாதிப்பை உணருபவர்கள் தொடக்க நிலையிலேயே மருத்துவர்களை அணுக வேண்டும். தொற்றில் இருந்து வயதானவர்களை குடும்ப உறுப்பினர்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தொற்று குறித்துப பீதியையுயம், பயத்தையும் கிளப்புவதை தவிர்க்க வேண்டும். தொற்றை கட்டுப்படுத்துவதில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் தொற்றை கண்டறிய முடியும். தமிழகத்தில் சென்னையில் தொற்று பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது.
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பில் 77% சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. இந்த 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பது நல்லது. எனவே தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை. பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை தர மருத்துவர்கள் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும் சென்னையில் பொது போக்குவரத்துக்கு பேருந்து, ரயில்களை இயக்கக்கூடாது. வழிபாட்டு தலங்களை திறக்கக்கூடாது என மருத்துவர்கள் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.