சாத்தான்குளம் சம்பவத்தில், உண்மைக்குப் புறம்பான பல தகவல்களை, பொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டி விடும் வகையில் சித்திரித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப் படுவதாகவும், அவ்வாறு தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் சிபிசிஐடி போலீஸார் எச்சரித்துள்ளனர். இவ்வாறு, வெட்டுக் காயங்களுடன் ஒருவரது படங்களைப் பகிர்ந்து அது சாத்தான் குளம் சம்பவ படம் என்று குறிப்பிட்ட இணைய தளம் மீது வழக்கு தொடரப் பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
சாத்தான்குளம் சம்பவத்தில், உயிரிழந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் உடம்பில், நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட இடங்களில், கொடூரமான வெட்டுக்காயங்கள் இருப்பது போன்ற படங்கள் மக்கள் செய்தி மையம் என்ற இணையதளத்தில் வெளியாகின. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு புகார்கள்
சென்றன.
இதையடுத்து ஜெயராஜ், பெனிக்ஸ் பிரேத பரிசோதனை அறிக்கையுடன், இணையதளத்தில் வெளியான படங்களையும் போலீசார் ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில் அந்தப் படங்கள் போலியானவை என தெரியவந்தது.
பொதுமக்களிடம் அமைதியை சீர்குலைக்கும் வகையில், அந்தப் படங்கள் சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளன என்றும், இந்தப் படங்கள் வழக்கின் விசாரணைக்கு தடையாக இருக்கும் என்பதால், படத்தை வெளியிட்ட இணையதளம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என இணையதளத்தின் ஆசிரியருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாகவும், உள்நோக்கத்துடன் சித்தரிக்கப்படும்
படங்களுடன் பொய்ச் செய்தி வெளியிடுவோர் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிசிஐடி போலீஸார் எச்சரித்துள்ளனர்.