சென்னையில் பசுமை இல்லா வாயுக்கள் வெளியீடு அதிகரித்து வருவதாகவும் இதனால் எதிர் காலத்தில் 2015ம் ஆண்டு ஏற்பட்டதைவிட கடுமையான மழைப்பொழிவு, வெள்ளம் சென்னையில் ஏற்படும் என்றும் சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
இந்த நிலையில் மழை வெள்ளம் மட்டுமல்ல, சென்னையின் கடலோரப் பகுதிகள் பலரும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் பாலாஜி எச்சரக்கைவிடுத்துள்ளார்.
சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்ப கழகத்தை (ஐஐடி) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 2035, 2055, 2075 உள்ளிட்ட ஒவ்வொரு 20 ஆண்டு கால இடைவெளியிலும் சென்னையில் மழைப்பொழிவின் தீவிரம் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதுபோன்ற தீவிர மழைப்பொழிவின் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்துப் பேசிய பேராசிரியர் பாலாஜி, “2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துடன் ஒப்பிடுகையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்காலத்தில் அதைவிட இரண்டரை மடங்குக்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மெரினா உள்பட சென்னையின் தற்போதைய கடற்கரைப்பகுதிகள் பலவும் மழையின் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு கடலால் ஆட்கொள்ளப்படலாம். மேலும், சென்னை மற்றும் அதைச் சுற்றிலுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீர் கடலில் கலக்க வழியின்றி பெரும் பிரச்னை ஏற்படக்கூடும்” என்று கூறியுள்ளார்.
இது இந்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் சுமார் ஐந்தாண்டுகளுக்கு நடைபெறவுள்ள நீண்ட ஆராய்ச்சியின் ஒரு பகுதியே. எங்களது ஆராய்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களில் தீவிர வானிலை மாற்றத்தை தவிர்ப்பதற்கான, எதிர்கொள்வதற்கான வழிகளை ஆராய உள்ளோம்.
ஆனால், நீர் வளங்களை சரிவர பராமரித்தல், காடழிப்பை தடுத்தல், தீவிர வானிலை குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கும் கண்காணிப்பு அமைப்பை உருவாக்குதல், நகரக் கட்டமைப்பை பேரிடரை எதிர்கொள்ளும் அளவுக்கு திறம்பட மேம்படுத்துதல், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்தல், அவசரக் காலத்தின்போது மக்களை அதிவேகமாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லும் திட்டத்தை வகுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ள ஆரம்பித்தால் அது எதிர்காலத்தில் மிகுந்த பலனளிக்கும்” என்று அவர் உறுதிபட கூறுகிறார்.
இதை எதிர்கொள்ள அரசு இப்போதே திட்டமிடுவது அவசியம். சென்னையில் கூவம், அடையாறு என இரண்டு ஆறுகள் வழியாக வெள்ள நீர் கடலில் கலக்கிறது. இது தவிர பக்கிங்காம் கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. இந்த மூன்று நீர் நிலையிலும் ஆக்கிரமிப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இதை சீர் செய்து, மழை வெள்ளம் வெளியேற பாதுகாப்பான வழிமுறைகளை உருவாக்கினால் பாதிப்பைக் குறைக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.