சென்னை:
போக்குவரத்துக்கழக சீரமைப்பு பற்றிய ஆய்வு அறிக்கை முதல்வரிடம் தரப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக., செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்
போக்குவரத்துக்கழக சீரமைப்பு பற்றிய ஆய்வு அறிக்கை தமிழக முதல்வரிடம் தரப்பட்டது என்று, சென்னையில் முதல்வர் எடப்பாடியை சந்தித்த பின்னர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அந்த ஆய்வறிக்கையில் 27 பரிந்துரைகள் உள்ளன. மேலும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை ரத்து செய்ய யோசனை கூறியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
முன்னதாக முதல்வர் கே.பழனிசாமியை திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.
ஊதிய உயர்வு, ஓய்வுக்கால பலன்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 5 முதல் 11-ம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் மு.க.ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்தார். போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, கே.என்.நேரு, தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், டி.செங்குட்டுவன் எம்எல்ஏ ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இக்குழு தனது அறிக்கையை நேற்று முன்தினம் ஸ்டாலினிடம் வழங்கியது.
இந்நிலையில் இந்தக் குழுவின் அறிக்கையை வழங்குவதற்காக முதல்வர் பழனிசாமியை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து அளித்ததாக, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.