
தச்சூரில் ஆம்னி பேருந்து – லாரி மோதியதில் 4 பேர் பலியாயினர் லிஃப்ட் கேட்டு ஏறிய ஓட்டுநரும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் பகுதியில் திங்களன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்து, டேங்கர் லாரி மோதிய விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து தனியார் பேருந்து சென்னை நோக்கி 30 பேருடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தச்சூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற டேங்கர் லாரி பிரேக் போட்டதால் டேங்கர் லாரி பக்கவாட்டில் மோதியது.
இந்த விபத்தில் தனியார் பேருந்து ஒரு பக்கம் முழுவதும் சிதிலமடைந்து அதில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதில் பேருந்தில் பயணித்த ஆந்திர மாநிலம் நெல்லூர் விடவல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(27), பெங்களூர் ரூப தூங்கா நகர் ரோகித் பிரசாத்(24), ஸ்ரீதர்(22) சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதில் சென்னை மாநகர போக்குவரத்தைச் சேர்ந்த பாடியநல்லூர் பணிமனை ஓட்டுநரான தண்டலசேரி ஜானகிராமன் (42) புதுவாயில் பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் லிஃப்ட் கேட்டு ஏறி ஓட்டுநர் அருகில் அமர்ந்துள்ளார். புதுவாயிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணித்த நிலையில், பேருந்து விபத்துக்குள்ளாகி, படுகாயமடைந்து ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்த கிருபா ஸ்ரீ (58), விஷ்ணுபிரியா (25), பெசண்ட் நகரைச் சேர்ந்த சாய் பவன் (21) படுகாயத்துடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்ததும் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியாசக்தி தலைமையில், கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் மற்றும் கவரப்பேட்டை போலீசார் ஆகியோர் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டதோடு, போக்குவரத்து பாதிப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து கவரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.