
வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.3 தேசிய விருதுகள் பல்வேறு மாநில அரசுகளின் விருதுகள் பெற்ற வாணி ஜெயராம் உடலுக்கும் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் இன்று பிற்பகலில் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.வாணி ஜெயராம் மரணத்திற்கு காரணம் மேசை மீது விழுந்து தலையில் பலத்த அடி-காயம் தான் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை தகவல் அறிக்கை உள்ளதாக இந்த வழக்கை விசாரித்துவரும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்திய திரையுலகின் முன்னணி பாடகி வாணி ஜெயராம் சனிக்கிழமை காலமானார். இவரது இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
வாணி ஜெயராம் சனிக்கிழமை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து நிலை தடுமாறி கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாடகி வாணி ஜெயராம் உடல் ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு நேற்று தமிழக ஆளுநர் ரவி அஞ்சலி செலுத்திய நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாணி ஜெயராம் மறைவால், திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது என்றும் பல்வேறு மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர் வாணி ஜெயராம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மேசை மீது விழுந்து தலையில் பலத்த அடி-காயம் தான் பிரபல பாடகி வாணி ஜெயராம் இறப்பிற்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளனர். படுக்கைக்கு அருகில் இருந்த 2 அடி உயர மேசை மீது அவர் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், நெற்றியிலும், மேசையில் விளிம்பிலும் ரத்தக்கறைகள் இருந்தது என்று தடவியல் நிபுணர் சோதனையில் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில், அவரது வீட்டிற்கு சந்தேகப்படும்படி யாரும் சென்றதற்கான அடையாளங்கள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வாணி ஜெயராம் உடலுக்கும் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று பிற்பகலில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் 3 தேசிய விருதுகள் மற்றும் பல மாநில அரசுகளின் விருதுகள் பெற்ற வாணி ஜெயராம் உடலுக்கும் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
