
ஜனாதிபதி தமிழகம் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு பிப்ரவரி 18-ஆம் தேதி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக தமிழகம் வருகிறார். பிப்ரவரி 18-ம் தேதி தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 11.50 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் முர்மு, மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர், கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார்.
அதைத்தொடர்ந்து பிப்ரவரி 19-ம் தேதி கோவையிலிருந்து மீண்டும் புறப்பட்டு முர்மு தில்லி செல்கிறார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். தற்போது குடியரசுத் தலைவர் முர்மு மீனாட்சி அம்மனை தரிசிக்க உள்ளார். முர்மு, ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, தமிழகத்துக்கு வருகை தருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.