தான் ஆசைப்பட்டு சைக்கிள் வாங்குவதற்காக சிறுகச் சிறுக சுமார் 4 ஆண்டுகளாக உண்டியலில் சேர்த்து வைத்த ரூ. 8 ஆயிரத்தை, கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கினார் விழுப்புரத்தைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி அனுப் பிரியா.
தமிழகத்தின் விழுப்புரம் அருகே ஒரு மூலையில் இருக்கும் ஊரின் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி அனுப் பிரியா, தான் 4 ஆண்டுகளாக கனவு கண்டு சிறுகச் சிறுகச் சேமித்த உண்டியல் பணத்தை எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் கேரள மக்கள் படும் துன்பத்தை செய்திகளில் கண்டு, அப்படியே நிவாரணத்துக்காக வழங்கிவிட்டார்.
அவரைப் பொறுத்த வரை அது மிகப் பெரிய சேமிப்புதான்! தன்னால் ஒரு சைக்கிள் வாங்கி ஓட்ட முடியும் என்ற கனவைக் கண்டு கொண்டிருந்த சிறுமி, தனக்காக வைத்திருந்ததை தானமாகக் கொடுத்த அந்தச் செய்தி, பலரது கண்களைக் குளமாக்கியது. அது, ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் காதுக்கும் எட்டியது.
சிறுமியின் இந்தச் செயலால் கண்கலங்கிய ஹீரோ மோட்டார்ஸ் நிறுவன தலைவர் பங்கஜ் முஞ்சல், உடனே ஓர் அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டார். சிறுமி அனுப்ரியாக்கு வருடந்தோறும் அவர் பிறந்த நாள் பரிசாக ஒரு பைக் (சைக்கிள்) வழங்குவதாக அறிவித்துள்ளார்.
Anupriya, parnam to you. You are a noble soul and wish you spread the good around. Hero is too pleased to give you one bike every year of your life. Pl share your contact on my account. Love you and best wishes. Prayers for Kerala https://t.co/vTUlxlTnQR
— Pankaj M Munjal (@PankajMMunjal) August 19, 2018