சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை, வாழைக் கன்றுகளை இலவசமாக வழங்கவுள்ளது அரசு. புயல் பாதித்த பகுதிகளில் மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்தன. இங்கெல்லாம், பொது மக்களின் சொத்துகள் பல சேதமடைந்தன. பல ஆண்டுகளாக வளர்த்து வந்த தென்னை மரங்களும் லட்சக்கணக்கில் வேருடன் சாய்ந்தன. மா, பலா, முந்திரி, தேக்கு உள்ளிட்ட நீண்டகால மரங்களும் சாய்ந்தன. நெல், வாழை, கரும்பு ஆகியவையும் நாசமாயின.
வீடுகள் சேதமடைந்தன. வாழ்வாதாரமாக விளங்கிய பயிர்களும், மரங்களும் சேதமாகின. இதனால், புயலில் சாய்ந்த தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1,100 வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதேபோல், மற்ற பயிர்களுக்கும் இழப்பீடு அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு மறுவாழ்வுத் திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்தப் படவுள்ளதாகக் கூறப் படுகிறது.
அதன்படி, விவசாயிகளுக்கு புதிதாக மரக் கன்றுகளை இலவசமாக வழங்கவும், ஓர் ஆண்டுக்கான உரத்தையும் விலையில்லாமல் கொடுக்கவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக, 5 லட்சம் தென்னங் கன்றுகளை கர்நாடகாவில் இருந்து வாங்க முடிவு செய்யப் பட்டுள்ளதாம். மேலும், டெல்டா மாவட்டங்களில் தற்போது நடந்து வரும் இழப்பு குறித்த கணக்கெடுப்பு நிறைவு பெற்றதும், மறுவாழ்வுத் திட்டத்தை அரசு அறிவிக்கும் என்று கூறப் படுகிறது.