சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன. நேற்று 35 மூட்டைகளில் பணம் கைப்பற்றிய நிலையில் மேலும் 25 மூட்டைகள் சிக்கியுள்ளன.
முன்னதாக, நேற்றும் சென்னை மாதவரத்தில் சிறு துண்டுகளாக்கி மூட்டை மூட்டையாக வீசப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
புழல் ஏரியை அடுத்து ஆட்டு சந்தை என்ற இடம் உள்ளது. இங்கு பழைய குப்பைகள் உள்ளிட்டவற்றை கொட்டும் ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில் நேற்று காலை ஏராளமான வெள்ளை நிறச் சாக்கு முட்டைகள் கிடந்தன. அவற்றை அப்பகுதி மக்கள் பிரித்துப் பார்த்த போது சிறு துண்டுகளாகக் கத்தரிக்கப் பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த மாதவரம் போலீசார் மொத்தம் 36 மூட்டைகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டதையடுத்து பல்வேறு இடங்களில் கணக்கில் வராமல் இருந்த பழைய ரூபாய் நோட்டுகள் மூட்டைகளில் கட்டி வீசப்பட்டன.
கடந்த ஆண்டு புழல் பகுதியில் இதேபோன்று மூட்டை மூட்டையாக பழைய ரூபாய் நோட்டுகள் வீசப்பட்ட நிலையில் அதனை வீசியவர்கள் யார் என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.