மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்!
சமூக அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது.
இதன்படி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
ஆனால், பொருளாதார அடிப்படையில் நலிந்த பிரிவினர் என்பதற்கான அளவுகோல் குறித்து சர்ச்சை எழுந்தது. மேலும், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த மசோதாவை தொடக்க நிலையிலேயே திமுக எதிர்த்தது. மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக மாநிலங்கள் அவையில் திமுக., உறுப்பினர் கனிமொழி பலத்த எதிர்ப்பை பதிவு செய்தார்.
இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல! பொதுப்பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது என்பது இயற்கை நீதிக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏற்கெனவே 69 சதவீத இடஒதுக்கீடு உள்ள நிலையில், மேலும் 10 சதவீதம் என்பது இடஒதுக்கீட்டின் அளவை 79 சதவீதம் ஆக மாற்றிவிடும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து, அதற்கான சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.