சென்னை: சென்னையில் கால்டாக்ஸி ஓட்டுநர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், போலீசார் தகாத வார்த்தைகளில் தன்னைத் திட்டியதே இந்த விபரீத முடிவுக்கு காரணம் என, தற்கொலைக்கு முன்னர் அந்த டிரைவரே பேசி பதிவு செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஓட்டுநர் இப்படி ஒரு உச்சபட்ச முடிவை எடுத்திருக்கிறார் என்றால், அந்த போலிஸார் எந்த அளவுக்கு இழிசெயலைச் செய்து, கேவலமாக நடந்திருப்பார்கள் என்று சமூக வலைத்தளங்களில் போலீஸாரை திட்டித் தீர்க்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த ராஜேஷ் சென்னையில் NTL நிறுவனத்தில் கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்தார். கடந்த 25ஆம் தேதி காலை 8 மணி அளவில் டிஎல்எஃப் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். வழியில் மற்றொரு ஊழியரை ஏற்றிக் கொள்வதற்காக பாடி சிக்னலில் அருந்து அண்ணா நகர் செல்லும் வழியில் கால்டாக்ஸியை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த போலீசார் இருவர் ராஜேஷை கடுமையாக திட்டித் தீர்த்து, கொச்சை வார்த்தைகளால் வசை பாடி, காரின் பின்புறத்தில் தட்டி சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கிருந்து 100 அடி தொலைவில் சற்று தள்ளி காரை நிறுத்தியுள்ளார் ராஜேஷ்.
ஆனால் தொடர்ந்து அங்கும் வந்த போலீசார், காரில் அமர்ந்திருந்த பெண் பயணி முன்னிலையிலேயே ராஜேஷை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த ராஜேஷ், சென்னையை அடுத்த மறைமலைநகரில் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், குடும்பப் பிரச்னை காரணமாக ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறினர். மேலும், அவரிடமிருந்து எடுக்கப் பட்ட செல்போனில், போலீஸாரின் அராஜகத்தாலேயே தாம் தற்கொலை செய்து கொண்டதாக அவர் பதிவு செய்த விவரங்கள் இருந்துள்ளதைக் கண்ட போலீஸார், அதிர்ச்சி அடைந்து, அவற்றை அழித்துள்ளனர். பின்னர், செல்போனில் இருந்த அனைத்து தகவல்களையும் அழித்துவிட்டு, வெறும் செல்போனை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆனால், குடும்பப் பிரச்னை ஏதும் இல்லாத நிலையில், ராஜேஷின் மரணத்தில் சந்தேகம் இருந்ததால் குடும்பத்தினர் செல்போனில் அழிக்கப்பட்ட தகவல்களை ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலம் மீட்டுள்ளனர். இதில் தற்கொலைக்கு முன்னர் ராஜேஷ் பேசி பதிவு செய்த வீடியோ கிடைத்துள்ளது. அந்த வீடியோவில் மிகுந்த மனக் குமுறலுடன் பேசும் ராஜேஷ் தன்னுடைய சாவுக்கு காவலர்கள்தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இதுபோன்ற காவலர்களின் அராஜகங்களுக்கு தனது சாவு ஒரு முற்றுப் புள்ளி வைக்கட்டும் என்று உருக்கமாகக் கூறி, இறுதி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார் ராஜேஷ்.
கடந்த ஆண்டு தரமணி அருகே தகாத வார்த்தைகளால் போலீசார் திட்டியதால் மணிகண்டன் என்ற கால் டாக்சி ஓட்டுநர் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்போது மீண்டும் ஒரு சம்பவம்.
என்னதான் காவலர்களுக்கு யோகா பயிற்சி, தியானப் பயிற்சிகள் கொடுத்தாலும், காவலர்கள் மிக மோசமாகவே நடந்து கொள்கின்றனர் என்பதும், அவர்களைத் திருத்தவே முடியாது என்ற எண்ணமும், வெகுஜன மக்கள் சமூகத்தில் இருந்து பிரிந்தே கிடப்பவர்கள் என்ற எண்ணமும் வலுவாகிக் கொண்டே வருவது கவலையளிக்கும் அம்சம்தான்!
டிரைவர் ராஜேஷின் மரண வாக்குமூல வீடியோ பதிவு: