சென்னை: கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில் போக்குவரத்து போலீசார் மீதுதான் தவறு என்று விசாரணை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
வேலூர் மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் கடந்த 25ஆம் தேதி மறைமலைநகர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனை விசாரித்த போலீஸார், செல்போனில் இருந்து அனைத்தையும் அழித்துவிட்டு குடும்பத்தாரிடம் செல்போனை கொடுத்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், ஃபைல் ரெகவரி சாஃப்ட்வேர் மூலம், அதில் இருந்த தகவல்களை மீட்டுள்ளனர்.
அப்போது, ராஜேஷ் தன் தற்கொலைக்கு முன் பேசி பதிவு செய்த வீடியோ கிடைத்துள்ளது. அதில், தாம் தற்கொலை செய்து கொள்வது எதனால் என்று தெளிவாகப் பேசியிருக்கிறார். இந்த வீடியோவானது சமூக வலைத் தளங்களில் வைரலானது.
அண்ணா நகரில் காரை நிறுத்தி இருந்த போது பெண் பயணி முன்னிலையில் தன்னை போக்குவரத்து போலீசார் அவமானப் படுத்தி, கொச்சை வார்த்தைகளால் படுகேவலமாகத் திட்டியதாகக் கூறியிருந்தார் அந்த வீடியோவில்!
இந்நிலையில், சக கால் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தாலும், சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரும் வேண்டுகோள்களை முன்வைத்ததாலும், இந்தத் தற்கொலை குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜய குமாரிக்கு உத்தரவிடப்பட்டது.
இதை அடுத்து அண்ணா நகர் மற்றும் திருமங்கலம் போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றுவோர் உள்ளிட்ட 68 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் அளிக்கப் பட்டது.
அதில், ராஜேஷை கெட்ட வார்த்தைகளால் திட்டிய போக்குவரத்து போலீசார் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ் அந்த விடீயோ பதிவில் கூறிய அனைத்தும் உண்மை என்றும், போக்குவரத்து போலீசார் மீதே தவறு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், அந்த இரு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் பரிந்துரை செய்யப் பட்டிருந்தது.
எனவே இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப் பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.