தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார் கே.எஸ்.அழகிரி. இவர் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் விசுவாசி என்றெல்லாம் கூறப் படுபவர். திருநாவுக்கரசர் திடீரென தூக்கப்பட்டு அவரது இடத்துக்கு கே.எஸ்.அழகிரி வந்துள்ளார்.
தனது பதவிப் பறிப்பை தான் எதிர்பார்த்திருக்கவில்லை என்று வெளிப்படையாகச் சொன்னார் திருநாவுக்கரசர். மேலும், அதிக நாட்கள் காங்கிரஸ் தலைவராக இருந்த பெருமை தனக்கு இருப்பதாகவும், மற்றவர்கள் எல்லோரும் ஒரு வருடத்துக்குள் தூக்கப்படு விடுவார்கள் என்றும் மியூசிக்கல் சேர் விளையாட்டுதான் காங்கிரஸ் தலைவர் பதவி என்பது என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் திருநாவுக்கரசர்.
இந்நிலையில் இன்று பதவி ஏற்றுக்கொண்ட கே.எஸ்.அழகிரி, தனது பதவி ஏற்பு விழாவில் சிலவற்றை பேசியுள்ளார். அது இப்போதே சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கிவிட்டது.
கே.எஸ்.அழகிரி பேசியவற்றில் இருந்து….
40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்; தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
மதச்சார்பற்ற அணி மத்தியில் வர வேண்டும் என்பது தான் இலக்கு!.
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டி மோதல் இல்லை, கருத்து வேறுபாடுதான் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது; கட்சியில், பதவி யாருக்கும் நிரந்திரம் இல்லை!
காங்கிரசுக்கு இந்து கடவுள், மதம் மீது நம்பிக்கை உண்டு; ஆனால் மற்றவர்களிடம் திணிப்பதில்லை.!
பிரதமர் மோடி போல் ஆயிரம் பேர் வந்தாலும் காங்கிரஸ் கொள்கைகளை அசைக்க முடியாது என்று கூறியுள்ளார் கே.எஸ். அழகிரி.
திருபுவனத்தில் பாமக நிர்வாகி ராமலிங்கம் பயங்கரவாதத்தால் உயிரிழந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்து ஓட்டு வங்கி உருவாகி வருவதன் அச்சத்தால், இப்போது காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸுக்கு இந்து மதம் கடவுள் நம்பிக்கை எல்லாம் உண்டு என்றும், எங்களுக்கும் திமுக.,வுக்கு தொடர்பில்லை, திமுக., கொள்கைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெளியவைப்பதற்காக கோடிட்டுக் காட்டியுள்ளார்.