சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது! திமுக.,கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக., தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகின்றது. ஏற்கெனவே காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக., ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டன.
மேலும், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டன. இன்று மதியம் அண்ணா அறிவாலயத்தில் நடத்தப்பட்ட பேச்சுவா்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்குவது என முடிவு செய்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர்மொய்தீன், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியின் பெயர்ப் பட்டியலை அளித்துள்ளதாகவும், விரைவில் தொகுதி ஒதுக்கீடு செய்யப் பட்டு பெயர் அறிவிக்கப் படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தாங்கள் தங்களது சின்னமான ஏணி சின்னத்திலேயே போட்டியிடப் போவதாகவும் அவர் கூறினார்.