தண்ணீர் தட்டுப்பாடு தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிகப் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், மக்கள் தங்களின் கோபத்தை டிவிட்டர் பதிவுகளிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் #தவிக்கும்தமிழ்நாடு என்ற ஹேஷ் டேக் பிரபலமாகியுள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் தங்களது கருத்துகளையும் தங்கள் பகுதி தண்ணீர் பிரச்னையையும் தண்ணீருக்காக தாங்கள் அலைவதையும் கஷ்டப் படுவதையும் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், கடும் வறட்சி காரணமாக, தண்ணீருக்கு மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தாலும், உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீருக்காக வெட்டு, குத்து வன்முறைகளும் நடக்கத் தொடங்கியுள்ளது.
பருவ மழை பொய்த்ததால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இந்நிலையில், சென்னை கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.
சென்னை உட்பட பல மாவட்டங்களில், குடிநீர் மட்டுமின்றி குளிக்க, இயற்கை உபாதைகளைச் சமாளிக்கக் கூட தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதற்குமேகூட, பதிவு செய்து 25 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் விநியோக நிலையங்கள் முன் பெண்கள் சண்டை போட்டு போராடி, நீரை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. லாரிகளைப் பின் தொடர்ந்து கண்காணித்தபடியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது! இல்லாவிட்டால் அந்த லாரியை வழிமறித்து வேறு பகுதி மக்கள் திசை திருப்பி கடத்திச் சென்றுவிடுகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஆழ்துளை குழாய் கிணறுகள் வறண்டு விட்டன. மாநகராட்சி சார்பில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது.
ராமாபுரம் பகுதியில் இரு நாட்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. அனகாபுத்துாரில் தண்ணீர் பிரச்னையில் ஒரு பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இதே நேரம், தட்டுப்பாட்டை பயன்படுத்தி தண்ணீர் வியாபாரமும் கொடிகட்டிப் பறக்கிறது. தனியார் லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர். ஒரு குடம் குடிநீர் ஒன்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. குடிநீர் அல்லாத தண்ணீர் 6000 லிட்டர் 2,500 ரூபாய் என்றும், குடிநீர் ஆயிரம் லிட்டர் 600 ரூபாய் என்றும் விற்பனை செய்யப் படுகிறது.
பணம் கொடுத்தாலும் தினமும் தண்ணீர் கிடைப்பதில்லை! பணத்தை செலுத்தி விட்டு காத்திருக்க வேண்டியுள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு எந்தக் கூடுதல் கட்டணமும் இன்றி தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு பல நாட்கள் ஆகின்றன. குடிநீரை விலை கொடுத்து வாங்க முடியாத பலர் வீடுகளை காலி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்கள் பகுதி பிரச்னைகளை பலரும் டிவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் ஏன் இவ்வளவு பிரச்னை என்று காரணத்தையும் அடுக்கி வருகின்றனர். நன்கு மழை பெய்து, வெள்ளக் காடாக சென்னை மாறிய போது, தண்ணீரை சேமிக்காமல் எல்லாவற்றையும் கடலில் கொட்டிவிட்டு, இப்போது தண்ணீர் தண்ணீர் என்று அடித்துக் கொள்ள வேண்டுமா என்று ஒருவர் கேள்வி எழுபியுள்ளார். இதற்கான வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
Tamil Nadu government please take some precautions to save the rain water…! See how last time the water was wasted by mixing in the sea… Now we are suffering for Water… #தவிக்கும்தமிழ்நாடு #WaterCrisis #ChennaiWaterScarcity #Tamilnadu_Government #storewater #savewater pic.twitter.com/HisqG85qg4
— PRAVEEN KUMAR D (@dpraveen19995) June 15, 2019