திண்டிவனம் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹனுமனை தரிசனம் செய்தனர்.
பஞ்சவடி ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் ஜூன் 23 இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.
புதுச்சேரியை அடுத்த பஞ்சவடீயில் 36 அடி உயரத்தில் விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய ஸ்வாமி திருக்கோயில் உள்ளது. இங்கே மூல மூர்த்தியாக எழுந்தருளுயிருக்கிறார் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர். மேலும், ஜெயமங்கள மகா கணபதி, ஜெயமங்கள பட்டாபிஷேக ராமசந்திரமூர்த்தி ஆகியோரும் சந்நிதி கொண்டிருக்கின்றனர்.
கடந்த மே மாதம் ஸ்ரீவாரி வேங்கடாசலபதிக்கு புதிதாக சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரம், கணபதி, பட்டாபிஷேக ராமசந்திரமூர்த்தி, மூலவர் ஆஞ்ஜநேயர், புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சன்னதி விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணிக்கு விமர்சையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, காலை 5 மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூபம் 6 மணிக்கு திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி சேவை, 7 மணிக்கு புண்யாஹவசனம், கால சந்தி பூஜை, 8 மணிக்கு, மகா பூர்ணாஹூதி, பஞ்சாக்னி, ஸமாரோபணம் உள்ளிட்ட எட்டாம் கால பூஜைகள் நடைபெற்றன.
காலை 9 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி 10 மணிக்கு, ராஜ கோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முற்பகல் 10:15க்கு, மூலவர்களுக்கு மகா கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 10:30க்கு, வீரமணி ராஜூவின் தெய்வீக இன்னிசை கச்சேரி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல்பள்ளிப்பட்டு கிருஷ்ணமூர்த்தியின் உபன்யாச நிகழ்ச்சி நடைபெற்றது.