சென்னை : வருண ஜபம் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப் பட்ட நிலையில், கடந்த ஓரிரு நாளாக மேக மூட்டமாக இருந்த நிலையில், இன்று சென்னையின் பல பகுதிகளில் மழை வெளுத்துக் கட்டியது. அதேபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வானிலையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து, வானிலை ஆர்வலர்கள் சிலரும் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளான அண்ணாநகர், திருமங்கலம், பாடி, வில்லிவாக்கம், போரூர், மதுரவாயல், பூந்தவல்லி, மாங்காடு, குன்றத்தூர், திருவேற்காடு, அசோக்நகர், கிண்டி, நுங்கம்பாக்கம், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், மாதவரம், பெரம்பூர், வியாசர்பாடி, கோடம்பாக்கம், கே.கே.நகர் தியாகராயநகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, சின்னமலை, வளசரவாக்கம், பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, வடபழனி என சென்னையின் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
இதனால் சென்னைவாசிகள் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக வருண ஜபம், பிரார்த்தனைகள் என மேற்கொண்டு அது இப்போது கைகொடுத்திருப்பதாக ஆன்மிக நம்பிக்கை கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இருப்பினும் இந்த மழை, சென்னையின் குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்க்குமா என்பது சொல்வதற்கில்லை என்றும், இது சூட்டைத் தணித்து சென்னையின் நிலத்தை குளிர்விக்கும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் ஆர்வலர்கள்.
இந்நிலையில், இன்று இரவு நல்ல மழை இருக்கும் என்று வானிலை ஆர்வலர்கள் கணித்துக் கூறியிருக்கின்றனர்.