தாகத்தால் தவிக்கும் சென்னைவாசிகளை பயமுறுத்தும் வண்ணம், நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மே 27 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு, தற்காலிகமாக வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப் பட்டது. இந்நிலையில், மீண்டும் நாளை முதல் போராட்டம் அறிவித்தனர் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள்.
முன்னர் அவர்கள் கோரிய கோரிக்கைகளில்…
* நிலத்தடி நீரை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும்.
* நிலத்தடி நீரை கனிம வளப் பிரிவில் சேர்த்துள்ளதால் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நிலத்தடி நீரை பெறுவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் தொடர்பான தடையை நீக்க வேண்டும்.
* கனிம வளப்பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் – என்பவை பிரதானமாக இருந்தது. அவர்களுடன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் தற்போது, லாரிகளில் தண்ணீர் எடுக்க இடமில்லை என்பதாலும், தண்ணீர் கிடைக்கும் இடங்களில் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழும்புரம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய சங்கத்தினர், பருவமழை பொய்த்ததாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டதாலும் மக்கள் கடும் குடிநீர்ப் பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
லாரி நீருக்காக மக்கள் காத்திருக்கும் சூழ்நிலையில், தண்ணீர் கிடைக்கும் இடத்தை காட்டினால், தண்ணீர் எடுத்து மக்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளோம் என்றும், தண்ணீர் எடுக்கும் இடத்தில் போதிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் போதிய பாதுகாப்பு அளிப்பதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் நாளை தொடங்கவிருந்த வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தனியார் தண்ணீர் லாரி சங்கத் தலைவர் நிஜலிங்கம் அறிவித்துள்ளார்.
முன்னதாக, அரசு அதிகாரிகள் தனியார் தண்ணீர் லாரிகளை சிறைபிடிப்பதை கண்டித்து 25 ஆயிரம் தண்ணீர் லாரிகள் ஓடாது என்றும் அச்சங்கம் தெரிவித்தது. சென்னை பள்ளிக்கரணையை அடுத்த கோவிலம்பாக்கத்தில், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் மேடவாக்கம் நிஜலிங்கம், திருவள்ளூர் மாவட்டத்தில் 33 லாரிகள் உட்பட காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார். தனியார் தண்ணீர் லாரிகள் நீரை எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அங்குள்ள லாரிகளை உடனடியாக, அரசு அதிகாரிகள் சிறைபிடித்து விடுவதாக, அவர் கூறினார். இந்நிலையில் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.