காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று ஆனி கருட சேவை நடைபெறுகிறது. ஆனி ஸ்வாதி நட்சத்திரம் பெரியாழ்வார் அவதார திருநாள் கொண்டாடப் படுகிறது. இன்று கருட சேவையை முன்னிட்டும், நாளை குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டும், இன்றும் நாளையும் பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனி கருட சேவையை முன்னிட்டு இன்று மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அத்திவரதரை தரிசிக்க பெருமளவிலான அன்பர்கள் காஞ்சிபுரத்துக்கு வருகின்றனர். இன்றும் காலையில் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். விஐபி.,க்கள் பலரும் காஞ்சிபுரத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நாளை அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகிறார். இதனால் நாளை பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப் பட்டுள்ளது.