சென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள் நிறுவப் படுவதாக இந்துமுன்னணி கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து இந்துமுன்னணி வெளியிட்ட அறிக்கையில்…
36ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா வருகின்ற செப்டம்பர் 2ஆம் தேதி துவங்குகிறது. இதன் ஆலோசனைக் கூட்டம் இன்று (21.7.2019) ஓட்டேரி ஹேம்ராஜ் பேலஸ் திருமண மண்டபத்தில் காலை 11 மணி அளவில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன் தலைமை தாங்கினார். அதில் அட்வகேட் ஜி.கார்த்திகேயன், மாநகர பொறுப்பாளர்கள் மாதவரம் செல்வகுமார், சீனிவாசன், சிவ விஜயன், எஸ்.எஸ். முருகேசன், பசுத்தாய் கணேசன் ஆகியோர் பேசினர். மாநில செயலாளர் மணலி த. மனோகரன், நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம கோபாலன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இந்தக் கூட்டத்தில், வரும் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.
கூட்டத்தில் முக்கியமாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தந்து அருள்புரியும் காஞ்சிபுரம் அத்திவரதரை பக்தர்கள் தரிசிக்க தக்க ஏற்பாடுகளை செய்ய இந்து முன்னணி கொடுத்த வேண்டுகோளை ஏற்று நேற்று, தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தக்க ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய முன்வந்துள்ளதைப் பாராட்டுகிறோம்.
இந்தாண்டு, சென்னை மாநகரில் 5501 விநாயகர் திருமேனிகளை வைத்து இந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து பிரம்மாண்டமான விழாவாக நடத்திட முடிவு செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவை அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கொண்டாடுகிறார்கள். அதிலும் ஏழை எளிய மக்கள் இவ்விழாவை இந்து முன்னணியுடன் இணைந்து எடுப்பதால், விநாயகர் சதுர்த்தி விழா சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியாக நடத்திட ஏதுவாகவும் தமிழக அரசும், காவல்துறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பும், உதவியும் செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியில், “தெய்வீக தமிழ் மொழி காப்போம், போலி தமிழின வாதத்தை முறியடிப்போம்” என்ற கருத்து இடம் பெற இருக்கிறது. இக்கருத்தினை விநாயகர் சதுர்த்தி விழாவில் மக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இயற்கை, மரங்கள், நீர்நிலைகள், திருக்குளங்கள், ஆலயங்கள், ஆலயச் சொத்துக்கள் ஆகியவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க மக்களிடையே பொறுப்புணர்வை ஏற்படுத்த வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. – என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.