பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்த எச்சரிக்கையால், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்… என்று கோவை மாநகர காவல் ஆணையர் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
பயங்கரவாதிகள் 6 பேர், கோவையில் ஊடுருவியுள்ளனர் என்று போலீஸார் தரப்பில் எச்சரிக்கை வந்தது. இதை அடுத்து, இந்த எச்சரிக்கை காவல் துறை உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்துள்ளதை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உறுதிப்படுத்தியுள்ளார்.
ராணுவம் மற்றும் விமானப் படை தளங்களில் பாதுகாப்பை உஷார் நிலையில் வைக்குமாறு தகவல் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், பயங்கரவாத ஊடுருவல் குறித்த எச்சரிக்கையை அடுத்து, பாதுகாப்பும் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை! பயங்கரவாதிகள் அல்லது சந்தேக நபர்களின் புகைப்படங்கள் எதையும் காவல்துறை வெளியிடவில்லை என்று கூறினார் அவர்.
முன்னதாக, பயங்கரவாதிகள் 6 பேர் கோவையில் ஊடுருவியுள்ளதாகவும், அவர்களில் 3 பேரின் படங்கள் வெளியிடப் பட்டுள்ளதாகவும் முன்னணி ஊடகங்களில் படத்துடன் தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து காவல் உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக டிஜிபி அலுவலகம் இந்தப் படங்கள் வெளியானது எப்படி என்று அதிர்ச்சி அடைந்துள்ளது.