காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..

Published:


காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,000கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலம் வயநாட்டிலும் மீண்டும் கன மழை பெய்ய துவங்கியது.மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே இவ்விரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால் ஆணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர்காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ணராஜசாகர் அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 28,944கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 26,349கன அடி வீதம் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது இதேபோல் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,657கனஅடியாக அதிகரித்துள்ளது அணையில் இருந்து வினாடிக்கு 19,667கன அடி வீதம் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளின் உபரி நீரால் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மாலை வினாடிக்கு 30,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 40,000 கன அடியாக அதிகரித்துள்ளது.இன்று மாலைமேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 40,000கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000கன அடி நீரும்உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 17,000கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

images 39 - 2026

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 400கன அடியிலிருந்து வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அணையின் நீர்மட்டம் 120அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img