நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அகில இந்திய அளவிலான சுற்றுப்பயணத்தின் துவக்கமாக நீலகிரியில் இருந்து பயணத்தை துவங்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று தமிழகம் வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் வரவேற்பளித்தனர்.
தி.மு.க., குடும்ப ஆட்சி செய்கிறது. முதல் பணி குடும்பத்திற்கு முக்கியத்துவம். இரண்டாவது பணி கட்சிக்கும். மூன்றாவதாக நாட்டுக்கு என்ற முறையில் செயல்படுகிறது, என ,மேட்டுப்பாளையத்தில் நடந்த பா.ஜ., தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா பேசினார்.
கோவை, நீலகிரி ஆகிய இரு லோக்சபா தொகுதிகளின், முதல் லோக்சபா தேர்தல் பிரசாரக் கூட்டம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடந்தது. கூட்டத்துக்கு கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா தலைமை வகித்தார். கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:
தமிழ்நாடு என்பது ஆன்மீகத்தின் உயர்வோடு விளங்கக்கூடிய மிகவும் பழமையான கலாச்சாரம் பெருமை கொண்ட, இந்த இடத்திற்கு வந்ததில், நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டுள்ளது. சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த மற்றும் மேற்கத்திய நாடுகளில் பிரதமர் மோடியை வியந்து பார்க்கின்றனர். ஏற்றுமதியில் மருந்து, ஆயத்த ஆடைகள் உற்பத்தி துறைகளில், கணிசமாக அளவுக்கு முன்னேறி கொண்டுள்ளோம். உலகில் ஏற்றுமதியில் நாம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி வருகிறோம்.
ஏழை மக்கள் பசியோடு உறங்க கூடாது என்பதற்காக, பிரதமர் மோடி, வறுமை ஒழிப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் வாயிலாக ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு, 80 கோடி மக்கள் பயனடைகின்றனர். மேலும் ,11 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 40 சதவீதம் இந்திய மக்கள், தரமான மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய வாய்ப்பினை இந்த அரசு உருவாக்கி உள்ளது.
தமிழகத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள், துவங்குவதற்கு பிரதமர் மோடி அனுமதி கொடுத்து, அந்த மருத்துவ கல்லூரிகளுக்கு அதிகமான நிதியை மத்திய அரசு கொடுத்துள்ளது. இந்தியாவில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய போன்ற வளர்ந்த நாடுகள் கூட கொரோனா தடுப்பூசி திட்டத்தை மக்கள் மத்தியில் முழுமையாக கொண்டு சேர்க்கவில்லை. இந்தியாவில் இரண்டு தடுப்பு ஊசிகள் கண்டுபிடித்து, 220 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாம் பாதுகாப்பாக தற்போது இருப்பதற்கு தடுப்பூசி திட்டம் முக்கியமாகும்.
ஒரு காலத்தில் போலியோ, தட்டம்மை ஆகிய நோய்களுக்கு வெளிநாட்டிலிருந்து மருந்து இறக்குமதி செய்ய காத்துக் கொண்டிருந்த நிலை இருந்தது. ஆனால் இன்று 100 நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்துள்ளோம். அதில், 46 நாடுகளுக்கு இலவசமாக வழங்கி , அந்த நாட்டு மக்களை காப்பாற்றியுள்ளோம்.
உக்ரைன் போரில் உக்ரைன் – ரஷ்யா ஆகிய இரு நாட்டுத் தலைவர்களுடன் பேசி, 42,000 மருத்துவ படிக்கும் மாணவர்களை மத்திய அரசு இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது . ராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் கேந்திரங்கள், ஆறு வழிச்சாலையில் இருந்து 8 வழி சாலையாக மாற்றியதற்கும், எட்டு புதிய ரயில்வே ஸ்டேஷன்களுக்கு என 800 கோடி ரூபாய் செலவில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்குகிறது .
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி செய்கிறது. அவர்களின் முதல் நோக்கம் குடும்பத்தை பாதுகாப்பது. டி.எம்.கே ., என்பது, டி. என்பது வாரிசு அரசியல், எம். என்பது மணி. இவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோளாக உள்ளது. கே. என்பது கட்டப்பஞ்சாயத்து. அதனால் திமுக என்றால், கட்டப்பஞ்சாயத்து.
அவர்களின் நோக்கம் கொள்ளையடிப்பது மட்டுமே. தமிழகம் ஒரு பாதுகாப்பான கையில் இல்லை. பா.ஜ., மக்களுக்கு சேவை செய்யும் வகையில் உள்ளது. ஆனால் தி.மு.க., தங்கள் குடும்பத்தை பாதுகாக்க அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் சுயநல சிந்தனையோடு, முதலில் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தும், இரண்டாவது கட்சிக்கும், மூன்றாவது தான் நாட்டு மக்களுக்கு, என்ற அளவில் செயல்படுகின்றனர்.
பா.ஜ., அரசு முதலில் நாட்டு மக்கள். இரண்டு கட்சி. மூன்றாவது தான் சுயநல சிந்தனை. காங்கிரஸ் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கொடுத்தது. அதனால் இந்தியாவிலிருந்து அது தனித்து இருந்தது போல் இருந்தது. ஆனால் மோடி, 370 என்ற சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தன் வாயிலாக, ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்பட்டது. எனவே அடுத்த முறை இங்கு வரும்போது, நீலகிரியில் தாமரை மலர்ந்து இருக்க வேண்டும். இவ்வாறு தேசிய தலைவர் நட்டா பேசினார். அவருடைய பேச்சை வானதி சீனிவாசன் மொழிபெயர்த்தார்.