சேலம்: நுாதன முறையில் பொங்கல் பண்டிகை இனாமாக 70 ஆயிரம் ரூபாய் பெற்றதாக சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர், தலைமை எழுத்தர் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினர்.
சேலம், சுகவனேஸ்வரர் கோவில், ராஜகணபதி கோவில், காசி விஸ்வநாதர் கோவில் உட்பட ஆறு கோவில்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ் உள்ளன. இவை அனைத்தையும் சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணைய தமிழரசு (55) தலைமை எழுத்தர் வன்னியர் திலகம்(48) ஆகியோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
இவற்றில் ராஜகணபதி கோவிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் வெள்ளி, தங்கத்தாலான கவசங்கள், ஆபரணங்கள் அனைத்தும் அந்த கோவிலில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு வந்தது. அண்மையில், அந்த அறையில் இருந்த பொருட்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
தற்போது அந்த அறையை லஞ்ச வசூல் இடமாக மாற்றி, அதில் ஒரு டேபிள் வைத்துள்ளனர். அந்த டேபிளுக்கும், அறைக்கும் இரண்டு சாவிகள் தயார் செய்து, அதில் ஒன்றை அதிகாரிகள் வைத்திருப்பதும், மற்றொன்றை லஞ்சம் இனாம் பேசி தர ஒப்புக் கொள்பவரிடம் வழங்கி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சாவியை பெறுவோர், தனித்தனியாக பெயர் எழுதி கவரில் பணத்தை வைத்து அறை டேபிளில் வைத்து பூட்டி விட வேண்டும். பின்னர் அந்தப் பணத்தை உதவி ஆணையர், தலைமை எழுத்தர் இருவரில் ஒருவர் சென்று எடுத்துக் கொள்வர். இந்த நுாதன வசூல் குறித்து, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி., சந்திரமவுலிக்கு புகார்கள் சென்றன.
பொங்கல் பண்டிகையான இன்று (ஜன.,15) காலை இரண்டு கான்ட்ராக்டர்கள் பணத்தை கொடுக்க சம்மதித்து இருந்தனர். சுவாமி தரிசனம் செய்ய வருவது போல் வந்து, அறையில் சென்று பணத்தை வைத்தனர். இதை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்காணித்தபடி இருந்த நிலையில், உதவி ஆணையர் தமிழரசு அறைக்குச் சென்று பணத்தை எடுத்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடம் இருந்து பெறப்பட்ட இரண்டு கவர்களில், ஒன்றில் தமிழரசு பெயரில் 60 ஆயிரம் ரூபாய், மற்றொன்றில் வன்னியர்திலகம் பெயரில் 10 ஆயிரம் ரூபாய் என எழுதப் பட்டிருந்தது. கவர்களை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து தமிழரசிடம் விசாரணை நடத்தினர். அதில், பொங்கல் இனமாகக் கிடைத்ததாக அவர் கூறினார்.
லஞ்ச புகாரில் சிக்கும் இரண்டாவது உதவி ஆணையர்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், 2008இல் உதவி ஆணையராக இருந்த விஜயகுமார், சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய போது பிடிபட்டார். தற்போது, தமிழரசு, பொங்கல் இனாம் வசூலித்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வலையில் சிக்கியுள்ளார்.
..