கோபிச்செட்டிப்பாளையம் :கோபியில் இலவச லேப்டாப் வழங்க வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சரை மாணவிகள் முற்றுகையிட்டனர்
கோபியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவதற்காக வந்தார்.
அப்போது பள்ளி முன்பு திரண்டு இருந்த 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் அமைச்சரை முற்றுகையிட்டு கடந்த 2017ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த தங்களுக்கு இது வரை லேப்டாப் வழங்கப்பட வில்லை எனவும், கடந்த இரண்டு ஆண்டாக வழங்குவதாக வெறும் அறிவிப்பு மட்டுமே உள்ளது.
தற்போது கல்லூரியில் சேர்ந்துள்ள தங்களுக்கு லேப்டாப் வழங்கினால் மட்டுமே படிக்க முடியும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் இரண்டு மாதத்தில் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்படும் எனவும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆனால் அதை ஏற்காத மாணவிகள் இரண்டு ஆண்டுகளாக இதே போல் தான் கூறி வருகிறீர்கள் என கூறி தொடர்ந்து முற்றுகையிட்டனர்.
இரண்டு மாத காலத்தில் உறுதியாக வழங்கப்படும் என உறுதி அளித்து விட்டு அமைச்சர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதுகுறித்து மாணவிகள் கூறும் போது, பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படும் போது லேப்டாப் வழங்கப்பட்டதாக சீல் ( முத்திரை) வைத்துள்ளனர்.
ஆனால் இது வரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் தான் அமைச்சரை முற்றுகையிட்டோம் என்றனர்.