மதுரையில் பெரும்பாலானோர் 20 முதல் 50 வயதை உடையவர்களே அதிகமாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மதுரையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பில் 80 சதவீதத்தை மாநகராட்சி சுமக்கிறது. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டோரை கொரோனா எளிதில் தாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இவர்கள் வீடுகளை விட்டு வெளி வருவதில்லை. மற்ற வயதினர் தெருக்களில் நடமாடுவது அதிகம். 20 முதல் 50 வயதிற்குள்ளோர் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக் கொள்ள எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக கற்பனை செய்கின்றனர்.
கொரோனாவிடம் பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதனால் இவ்வயதினர் அதிகம் பாதிப்பு பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இளவயதினர் அதிகம் பாதிப்பு ஜூன் 29 தேதி வரையிலான பாதிப்பு பட்டியலில் மாநகராட்சியில் 1627 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் 1 முதல் 20 வயதுள்ளோர் எண்ணிக்கை 172, 21 முதல் 50 வயதினர் 1017 பேர், அதற்கு மேற்பட்டவர்கள் 438 பேர் உள்ளனர். இளவயதினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா முதியவர்கள், பிறநோய் இருப்பவர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். இது வயது வேறுபாடின்றி தாக்கும். இளவயதினர் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வராதீர்கள்’ என்றனர்.
மதுரை மாநகராட்சியில் வயது வாரியாக பாதித்தோர் பட்டியல்:
வயது – பாதித்தோர்
******************************
1 முதல் 10 – 55 பேர்
11 முதல் 20 – 117 பேர்
21 முதல் 30 – 347 பேர்
31 முதல் 40 – 350 பேர்
41 முதல் 50 – 320 பேர்
51 முதல் 60 – 269 பேர்
61 முதல் 70 – 146 பேர்
70க்கு மேல் – 23 பேர்
*****************************
மொத்தம் – 1627 பேர்
******************************