மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் 63.2 சதவீதம் ஆண்கள், 36.8 சதவீதம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 முதல் 40 வயதுடையவர்களை தான் அதிகளவில் வைரஸ் தாக்கியுள்ளது.
மொத்த பாதிப்பில் இவர்களது பங்களிப்பு மட்டும் 19.85 சதவீதமாகும்.மதுரையில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்துவிட்டது. ஜூலை 12ல் 6078 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒரு சர்வே மேற்கொண்டனர். அதில் வயது வாரியாக பாதிக்கப்பட்டோர், ஆண், பெண் பாதிப்பு விவரத்தை கணக்கிட்டனர். இதன் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
இதில் 6078 பேரில் ஆண்கள் மட்டும் 3841 பேர் உள்ளனர். 2237 பெண்களும் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். அதாவது, 63.2 சதவீதம் ஆண்கள், 36.8 சதவீதம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல வயது வாரியாக மேற்கொண்ட சர்வேயில், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் 142 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 82, பெண்கள் 61 பேர் இடம்பிடித்துள்ளனர். 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் 338 பேர் உள்ளனர்.
இருப்பினும் இளைஞர்களை தான் அதிகளவில் வைரஸ் தாக்கியுள்ளது. அதிலும்31 முதல் 40 வயதினர் தான் பட்டியலின் உச்சியில் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மட்டும் 1207 ஆகும்.
இது மொத்த பாதிப்பில் 19.85 சதவீதமாகும்.21 முதல் 60 வயதுடையவர்கள் மட்டும் 74.1 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ் கூறியதாவது: பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், பிற நோய்கள் இருப்பவர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையுமே கொரோனா தாக்கும்.
வைரஸிற்கு வயது வேறுபாடு தெரியாது. மற்றவர்களை பத்திரப்படுத்தும் இளைஞர்கள் தங்களை வைரஸ் தாக்காது என எண்ணி அதிகம் வெளியில் நடமாடுகின்றனர். எனவே தான் பாதிப்பில் இவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.வீட்டிலும் பரப்புகின்றனர் இவர்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பின்னர் தங்களுக்கு தெரியாமலேயே வீட்டில் இருப்பவர்களுக்கும் பரப்பிவிடுகின்றனர்.
இப்படித்தான் பல குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை உணர்ந்து அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பாதுகாப்பு அம்சங்களுடன் இளைஞர்கள் வெளியில் வர வேண்டும்.
தேவையின்றி வருவதை தவிர்ப்பது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நல்லது. அப்போது தான் கொரோனாவும் கட்டுப்படும், என்றார்.