மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள உலகநேரியைச் சேர்ந்தவர் அரவிந்தராஜ்,இவர் வழக்கறிஞர் பாஸ்கரமதுரம் என்பவரிடம் ஓட்டுநராக உள்ளார்.
கடந்த 18ம் தேதி இரவு மதுரை உயர் நீதிமன்ற கிளை அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றபோது, மதுரை நகர் டெல்டா போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் அவரை விசாரித்துள்ளனர். சீருடை அணியாமல் இருந்த அவர்களை போலீஸ் என தெரியாமல் ‘‘ நீங்கள் யார், என்னை விசாரிக்கிறீர்கள்’’ என ஓட்டுநர் கேட்டுள்ளார்.
அப்போது அரவிந்தராஜின் வாகனத்தை போலீஸார் பிடுங்கியுள்ளனர். வழக்கறிஞர் ஒருவரின் ஓட்டுநர் என கூறியும் அவரை தாக்கி டெல்டா போலீஸ் படையினர் பணம் கேட்டு மிரட்டியதாக மதுரை புதூர் காவல் நிலையத்தில் அரவிந்தராஜ் புகார் அளித்தார்!
இப்புகாரின் எதிரொலியாக சம்பவத்தன்று 5-வது டெல்டா போலீஸ் படையில் பணியிருந்த 6 காவலர்களை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்ததாக காவல் துணை ஆணையர் சிவபிரசாத் தெரிவித்தார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை