ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் அமைதி அமைப்பு ( United Nations Association for Development And Peace ) சார்பில் ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த 9 ம் வகுப்பு பள்ளி மாணவி நேத்ரா ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டில் மத்திய அரசின் திட்டங்களை முன்வைத்து பேசியது மகிழ்ச்சி அளிப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் அமைதி அமைப்பின் ( United Nations Association for Development And Peace ) சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த 9 ம் வகுப்பு பள்ளி மாணவி நேத்ரா நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா வறுமை ஒழிப்பு மாநாட்டில் வீடியோ கான்பிரஸிங் மூலம் பேசினார்.
பெண்களுக்கான மத்திய அரசின் திட்டங்களை முன்வைத்து அந்த மாநாட்டில் பேசியது தமக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக மாணவி நேத்ரா தெரிவித்துள்ளார் . மதுரை மேலமடை பகுதியில் முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன்தாஸ் என்பவரின் மகளான 9 ம் வகுப்பு மாணவி நேத்ரா, மதுரையில் பொதுமுடக்கத்தால் வறுமையில் வாடிய ஏழை மக்களுக்கு தனது கல்விக்காக வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை கொண்டு நிவாரண பொருட்களை உதவிகளை வழங்கினார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் “ மனதின் குரல் ” நிகழ்ச்சியில் பேசியபோது , முடிதிருத்தும் தொழிலாளியின் மனித நேயம் என்று குறிப்பிட்டு பாராட்டுத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் அமைதிக்கான தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராகவும் நேத்ரா அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டில் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் பேசிய மாணவி நேத்ரா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இது குறித்து பேட்டி அளித்த மாணவி நேத்ரா, மத்திய அரசிற்கு தமது நன்றியை தெரிவிப்பதாகவும், நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டில் மத்திய அரசின் திட்டங்களை முன்வைத்து பேசியது பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.
மேலும் , பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கும், ஏழை மக்களின் வறுமையைப் போக்குவது, ஜாதி , மத , இன வேறுபாடின்றி பட்டினியைப் போக்க பாடுபடுவது என எனது பணி தொடரும் என்றும் தெரிவித்த அவர் , வறுமையில் வாடும் பெண்களுக்கு ஐநா செய்து வரும் செயல்பாடுகள் குறித்தும் தாம் அப்போது கேள்வி எழுப்பி கேட்டறிந்ததாகவும் நேத்ரா தெரிவித்தார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை