கள்ளழகர் கோவில் ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கள்ளழகர் கோவிலில் சுந்தரராஜ பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பக்தர்கள் பங்கேற்பு இன்றி பட்டாச்சாரியார்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உலகப்புகழ்பெற்ற அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி திருவிழா நடைபெறும். சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக வெகு விமர்சையாக ஆடி திருவிழாவனது ஆலயத்தில் நடைபெறும் நிலையில் இந்தாண்டு கொரோனா காரணமாக பொதுமக்கள் மற்றும் முறைதாரர்கள் இன்றி ஆடி பிரமோற்சவ திருவிழா சன்னதி முன்பாக உள்ள கொடிமரத்தில் கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருக்கோவில் பட்டாச்சாரியர்கள் மற்றும் பரிசாரர்களால் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 26ஆம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆடி திருவிழாவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்க பல்லக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து காட்சி தந்து வருகின்றார்.
ஆடிப்பெருக்கு நாளான நேற்று சுந்தரராஜ பெருமாளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. அழகர் கோயில் உள் பிரகாரத்தில் எட்டாம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது அப்பொழுது சுவாமிக்கு பட்டாச்சாரியார்கள் பாலாஜி பட்டர் மூலம் சிறப்பு அலங்காரம் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. கள்ளழகர் திருக்கோவில் வளாகத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
வைகை ஆற்றில் இறங்கும் போது அதிகாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகரை காண கண் கோடி வேண்டும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடைபெறவில்லை. அதே போல ஆடி பிரம்மோற்சவ விழாவும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. இரவு புஷ்ப பல்லக்கும், 4ஆம் தேதி செவ்வாய் கிழமை 10ம் திருநாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.