மதுரை: இன்று ஆலயங்கள் சுமார் 5 மாத கால இடைவெளியில் திறக்கப்படுவதை அடுத்து, அதிகாலை முதலே சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காத்திருந்தனர்.
இன்று முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கிழக்கு கோபுர அம்மன் சந்நிதியில் இருந்து தெற்கு கோபுரம் வரை பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்
பக்தர்களுக்கு இடையே சமூக இடைவெளி யோடு வருவதற்காக வட்டம் இடப்பட்டிருக்கிறது.
அதேபோன்று இன்று பௌர்ணமி தினம் என்பதாலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் முதல் நாள் என்பதால் வழக்கத்தைவிட அதிகமான அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
மதுரை, திருப்பரங்குன்றம்: ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை திறக்கப் பட்டது. முக கவசம் அணிந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரானா ஊரடங்கு தடை உத்தரவு நீங்கியதால் கோயில் நடை திறக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் கால்களை சுத்தம் செய்த பின்பு கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கோவிலில் நிர்வாகம் சார்பில் காய்ச்சல் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.,
பின்னர் கோவிலுக்குள் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் அலங்காரப் பொருட்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை .
- – செய்தி: ரவிச்ச்ந்திரன், மதுரை