வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…
மதுரை வேளாண்மை விற்பனை குழுவின் கீழ் இயங்கும் மேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 10.9.2020 அன்று முதன்முறையாக ஏலம் மூலம் தேங்காய் விற்பனை நடைபெற்றது.
முதன்முறையாக மேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விற்பனைக்கென நடைபெற்ற மறைமுக ஏலத்தினை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பெ. விஜயலட்சுமி முன்னிலையில் மதுரை விற்பனை குழு செயலாளர் வி.மெர்ஸி ஜெயராணி துவக்கி வைத்தார். ஜி. வெங்கடேஷ் கண்காணிப்பாளர் மறைமுக ஏல முறை குறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு விளக்கிக் கூறினார்.
மேலூர் மற்றும் கொட்டாம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தி குழுக்கள் 4800 தேங்காய்களை இரு குவியல்களாக கொண்டு வந்தனர்.
மறைமுக ஏலத்தில் ஆறு தேங்காய் வியாபாரிகள் பங்குபெற்றனர். ஒரு தேங்காய் ரூபாய் 12.50 என்ற விலையில் 3600 காய்களை கொண்ட ஒரு குவியலும், ஒரு காய்க்கு அதிகபட்ச விலையான ரூபாய் 13/- என்ற விலையில் 1200 காய்கள் கொண்ட மற்றுமொரு குவியலும் ஏலம் முடிக்கப்பட்டு ரூபாய் 60600/- வியாபாரிகளிடம் இருந்து பெற்று உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இதனால் விவசாயிகள், உழவர் உற்பத்தி குழுக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து இனி வரும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தேங்காய் மறைமுக ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே இதனை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தேங்காய் ஏலம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கருப்பையா (மேற்பார்வையாளர் மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்) 9940965965 என்ற எண்ணிலும், ஜி. வெங்கடேஷ் (கண்காணிப்பாளர், மதுரை விற்பனை குழு) 90251 52075 என்ற எண்ணிலும் வெங்கடேசன், (உதவி வேளாண்மை அலுவலர்) 90473301972 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது…. என்று மதுரை விற்பனை குழு செயலர் தெரிவித்துள்ளார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை