இளையான்குடி அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது நெஞ்சுவலியால் முதியவர் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கண்டனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர் .
இன்று கண்டனி கிராமத்தில் கால்வாய் தூர்வாரும் பணியில் 100 நாள் திட்ட பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பணியில் ஈடுபட்டிருந்த நாகன் என்ற 61 வயது முதியவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி, பணியின்போது உயிரிழந்த முதியவர் நாகன் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
அப்போது உடன் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரை சூழ்ந்துகொண்டு பணியின் போது உயிரிழந்த நாதன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை தமிழக அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததை தொடர்ந்து இறந்த நாகன் உடலை அவரது இல்லத்திற்கு கிராம மக்கள் கொண்டு சென்றனர்.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் போது ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை