ஸ்ரீவில்லிபுத்தூர்:
இந்துக்களின் புனிதமான தெய்வமாகப் போற்றி வணங்கப்படும் ஆண்டாள் அம்மையை அவதூறாகப் பேசிய கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாளமாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார்.
கடந்த மாதம் 7ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கத்தில், தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் திரைப்படக் கவிஞர் பாடலாசிரியர் வைரமுத்து, கட்டுரை ஒன்றை வாசித்தார். ராஜபாளையம் மக்கள் தங்கள் குலதெய்வமாகப் போற்றிக் கொண்டாடும் ஆண்டாளைக் குறித்து துவக்கத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வந்தவர், ஒரு கட்டத்தில் பிறப்பு, தன்மை குறித்து மோசமான விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் பெயரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, தன் மனத்தில் உள்ள வக்கிரங்களை மேடையில் உதிர்த்தார். அது, நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களை பெரிதும் வருத்தப் படவைத்தது.
நாத்திகராக தன்னைக் காட்டிக் கொண்டு மேடைகளில் பேசி வரும் வைரமுத்து, இந்த நிகழ்ச்சியில் உள்நோக்கத்துடன் இந்து மத தெய்வங்களையும், படைப்புகளையும் இழிவு செய்யும் விதத்தில் பேசியதால், வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. வைரமுத்து தனது பேச்சுக்கு மனம் வருந்தி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல்கள் பலமாக எழுந்தன. இந்நிலையில், தனது பேச்சு யார் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக தான் வருந்துவதாக டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டார் வைரமுத்து.
ஆனால், எவர் மனமாவது புண்பட்டிருந்தால், அதற்காக தான் வருந்துவது என்ற வைரமுத்துவின் நிலைப்பாட்டை எவரும் ஏற்கவில்லை. அவர் தனது உள்நோக்கத்துடனான செயலுக்காக வருந்தி, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டங்கள் தொடர்ந்தன.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் வைரமுத்து மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். ஆனால், அன்பர்களின் வற்புறுத்தலுக்கு இறங்கிவந்து, உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தார்.
இதை அடுத்து, வைரமுத்து மன்னிப்பு கோர வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்க இருக்கிறார்.